வெப்ப அலை மற்றும் குளிர் அலைகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்!


ராஜஸ்தான்: வெப்ப அலை மற்றும் குளிர் அலைகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. டெல்லி, ராஜஸ்தான், பீகார் போன்ற வடமாநிலங்களில் வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. இந்நிலையில் வெப்ப அலை மற்றும் குளிர் அலைகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது தொடர்பாக ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி அனூப்குமார் தாந்த் தாமாக முன்வந்து விசாரித்தார். இதனையடுத்து மாநில அரசுக்கு பல உத்தரவுகளை ராஜஸ்தான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. “நாடு முழுவதும் அடுத்தடுத்து நிலவும் வெப்ப அலைகள் மற்றும் குளிர் அலைகளை தேசிய பேரிடர்களாக அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை மாநில அரசு வழங்க வேண்டும். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சாலைகளில் தண்ணீர் தெளிக்க வேண்டும். திறந்த வெளியில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்கள், சுமை தூக்குபவர்கள், வண்டி மற்றும் ரிக் ஷா இழுப்பவர்கள் உட்பட கடுமையான வெப்பமான சூழ்நிலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது. .

The post வெப்ப அலை மற்றும் குளிர் அலைகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்! appeared first on Dinakaran.

Related Stories: