பிஜப்பூர்: சட்டீஸ்கரில் ரூ.84 லட்சம் பரிசுதொகை அறிவிக்கப்பட்ட 26 பேர் உள்பட 34 நக்சல்கள் காவல்துறையிடம் சரணடைந்தனர். நாடு முழுவதும் நக்சல்கள் நடமாட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஒன்றிய அரசு உறுதி பூண்டுள்ளது. அதன்படி நக்சல்கள் நடமாட்டம் அதிகமுள்ள மாநிலங்களில் பல நக்சல்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டு வருகின்றனர். பலர் தாமாகவே முன்வந்து சரணடைந்தும் வருகின்றனர். இந்நிலையில் சட்டீஸ்கர் மாநிலம் பிஜப்பூரில் ரூ.84 லட்சம் பரிசுதொகை அறிவிக்கப்பட்ட 26 நக்சல்கள் உள்பட 34 நக்சல்கள் பிஜப்பூர் காவல்நிலையத்தில் நேற்று ஆயுதங்களை ஒப்படைத்து, சரணடைந்தனர். சரணடைந்த நக்சல்களுக்கு சட்டீஸ்கர் மாநில அரசின் மறுவாழ்வு கொள்கையின்கீழ், திறன் மேம்பாடு மற்றும் பிற வசதிகளுக்கான பயிற்சி போன்றவை மற்றும் தலா ரூ.50,000 உதவித்தொகை உடனடியாக வழங்கப்படும்” என மாநில அரசு தெரிவித்துள்ளது.
