எலி பேஸ்ட் சாப்பிட்ட 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

 

மங்கலம்பேட்டை, மே 27: விருத்தாசலம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் பல் விளக்கும் பேஸ்ட் என நினைத்து எலி பேஸ்ட் சாப்பிட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கொட்டாரக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (33). இவருக்கு அனுஷ்கா (3), பாலமித்திரன் (2) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வந்தது.

திருவிழாவில் கலந்து கொள்ள மணிகண்டனின் தங்கை அறிவழகி, அவரது மகள்கள் லாவண்யா(5), ராஷ்மிதா(2) ஆகியோருடன் வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு மணிகண்டனின் பிள்ளைகள் அனுஷ்கா, பாலமித்திரன், அறிவழகியின் மகள்கள் லாவண்யா, ராஷ்மிதா ஆகியோர் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை பல் துலக்கும் பேஸ்ட் என நினைத்து வாயில் வைத்து விளையாடினர்.

இதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரச மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆலடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post எலி பேஸ்ட் சாப்பிட்ட 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: