நீலகிரி, அந்தியூர், மேட்டுப்பாளையத்தில் யானைகள் கணக்கெடுப்பு இன்று துவங்கியது


ஊட்டி: ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணிகள் நீலகிரி மாவட்டம் மற்றும் ஈரோடு மாவட்டம் அந்தியூர், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையதத்ில் இன்று துவங்கியுள்ளது. வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த காட்டு யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று துவங்கியது. யானைகள் அதிகளவு உள்ள நீலகிரி மாவட்டத்திலும் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. இதன்படி முதுமலை புலிகள் காப்பகம், நீலகிரி மற்றும் கூடலூர் வன கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளில் வன ஊழியர்கள், தன்னார்வலர்கள் என 300க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இக்கணக்கெடுப்பு நேர்கோட்டு பாதையில் நேரடியாக யானைகளை பார்த்து கணக்கெடுத்தல், யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகள், குளம் குட்டை பகுதிகளில் கணக்கெடுப்பு, என 3 முறைகளில் நடந்தப்பட உள்ளது. இப்பணிகள் வரும் 25ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளன. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘யானைகள் கணக்கெடுப்பு இன்று துவங்கியுள்ளது. இப்பணிகள் வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. இதில் சாணம், கால்தடம் மற்றும் நேரடியாக பார்த்து கணக்கெடுத்தல், நீர்நிலை பகுதிகள், அவை அதிகமாக வரும் பகுதிகளில் முகாமிட்டு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது, 3 நாட்கள் கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு விவரங்கள் வெளியிடப்படும்’’. என்றனர்.

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் தந்தை பெரியார் வனம் உயிரின சரணாலயத்திற்குட்பட்ட அந்தியூர், சென்னம்பட்டி, பர்கூர், தட்டக்கரை ஆகிய நான்கு வனச்சரகங்களில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியது. அந்தியூர் வனச்சரகத்தில் வனச்சரகர் முருகேசன் தலைமையில் வன ஊழியர்கள் செல்லம்பாளையம் கிழக்கு பீட் பகுதியில் கணக்கெடுக்கும் பணியினை துவங்கினர். இப்பணியில் நான்கு வனச்சரகங்களிலும் 45 பீட்டுக்களாக பிரிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேட்டுப்பாளையம்: கோவை மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் வன ஊழியர்கள் ஐந்து குழுவினர், மத்திய வன உயிரின பயிற்சியகத்தில் பணிபுரியும் பயிற்சி அலுவலர்கள் இணைந்து ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் முதல் நாளான இன்று தொகுதி மாதிரி, இரண்டாம் நாளான நாளை நேர்கோட்டு முறை, மூன்றாம் நாளான நாளை மறுதினம் நீர் நிலைகளில் கால் தடம், சாணம் உள்ளிட்டவற்றின் மூலம் யானைகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்கப்பட உள்ளது.

The post நீலகிரி, அந்தியூர், மேட்டுப்பாளையத்தில் யானைகள் கணக்கெடுப்பு இன்று துவங்கியது appeared first on Dinakaran.

Related Stories: