திருப்பூர், மே 20: திருப்பூர் மாநகரின் போயம்பாளையம், தோட்டத்துப்பாளையம், நெருப்பெரிச்சல், அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மீன் கடைகள் உள்ளன. இங்கு கெட்டுப்போன மற்றும் சுகாதாரமற்ற முறையில் மீன் விற்பனை நடைபெறுவதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று மீன்வளத்துறை ஆய்வாளர் ரெஜினா ஜாஸ்மின், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தங்கவேல் மற்றும் ரவி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
மீன்களின் தரம், கடையில் சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, உணவு பாதுகாப்பு துறை சார்பில் மீன் விற்பனை கடைகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. கடைகளை சுத்தமாகவும், சுகாதாரமானதாகவும் பராமரிக்க வேண்டும், இருப்பு வைக்கப்படும் மீன்களை சரியான வெப்பநிலையில் பாதுகாக்கப்பட வேண்டும், மீன் விற்பனை செய்பவர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டும், கெட்டுப்போன மற்றும் பழைய மீன்களை விற்பனை செய்யக்கூடாது,
உணவு பாதுகாப்பு துறையின் பதிவுச்சான்று மற்றும் மாநகராட்சி உரிமம் பெற்று இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மீன்வளத்துறை சார்பில் பொதுமக்கள் மீன் வாங்கும்போது மீன்களின் கண்கள் பிரகாசமாக இருப்பது , மீன்களின் செதில்கள் சிவப்பு மற்றும் பிங்க் கலரில் இருப்பதை பார்த்து வாங்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
The post திருப்பூர் மாநகரில் மீன் விற்பனை கடைகளில் அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.