மதுரை, மே 19: வைகாசி மாதத்தின் முதல் முகூர்த்தம் மற்றும் விடுமுறை காலம், மழையால் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் மதுரை பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் விலை அதிகரித்து இருந்தது. ஒரு கிலோ ரூ.500க்குள் விற்று வந்த மல்லிகை பூ நேற்று ரூ.1000 ஆனது. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிற்கு தென்மாவட்ட பகுதிகள் மட்டுமல்லாது, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பூக்கள் வரத்து இருக்கிறது.
மார்க்கெட்டில் நேற்றைய ஒரு கிலோ பூக்கள் விலை விபரம் வருமாறு: மல்லிகை ரூ.1000, முல்லை ரூ.500, கனகாம்பரம் ரூ.2000, அரளி ரூ.400, வெள்ளை அரளி ரூ.600, சிவப்பு அரளி ரூ.800, சம்பங்கி ரூ.250, பட்டுரோஸ் ரூ.200, செவ்வந்தி ரூ.320, துளசி ரூ.80 மற்றும் வெள்ளை தாமரை ஒரு பூ ரூ.15, வண்ண தாமரை பூ ரூ.10 என விற்பனையானது. பூ வியாபாரி பால்பாண்டி கூறும்போது, ‘‘மார்க்கெட்டில் பூக்கள் விலை இரு மடங்கிற்கு உயர்ந்துள்து. ரூ.500க்குள் விற்ற மல்லிகை ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறது. இதுபோலவே அனைத்து பூக்கள் விலையும் இரு மடங்கு உயர்ந்திருக்கிறது. வைகாசி மாதத்தின் முதல் முகூர்த்த நாள் மற்றும் விடுமுறை தினம் என்பதால் பூக்கள் விற்பனை அதிகரித்து இருப்பதுடன், விலையும் உயர்ந்துள்ளது. இதற்கிடையே தற்போது பல்வேறு பகுதிகளிலும் கோடை மழைபெய்து வருகிறது. இதனால் பூக்கள் வரத்து குறைந்திருப்பதும் விலை உயர்விற்கு காரணமாக இருக்கிறது’’ என்றார்.
The post மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.1000 ஆனது: முகூர்த்தம், விடுமுறை எதிரொலி appeared first on Dinakaran.