சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் மார்பு மற்றும் விலா எலும்புக்கு சிறப்பு சிகிச்சை மையம் தொடக்கம்

சென்னை: சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் மார்பெலும்பு மற்றும் விலா எலும்பு கோளாறுகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தை இதயம் மற்றும் பெருநாடி கோளாறு நிறுவன இயக்குனர் பாஷி, சிம்ஸ் மருத்துவமனை துணை தலைவர் ராஜு சிவசாமி, சிம்ஸ் மருத்துவமனை மருத்துவர் ராஜ் கமல் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.

பின்னர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: விலா எலும்பு முறிவு என்பது மார்பின் பாதுகாப்புக்கூடாக விளங்கும் விலா எலும்பில் உண்டாகும் விரிசல் அல்லது முறிவு. இது மற்ற உடல் உபாதைகளை காட்டிலும் மோசமான ஒன்று. விலா எலும்பு

முறிவு பாதிக்கப்பட்டவர்களின் அன்றாட வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். விலா எலும்பு முறிவு எலும்புகளில் வலி மற்றும் அசௌகரியம் மன உளைச்சலை ஏற்படுத்தும். எனவே விலா எலும்பு முறிவுக்கு சிறப்பு சிகிச்சை வழங்க சிம்ஸ் மருத்துவமனையில் மார்பெலும்பு மற்றும் விலா எலும்பு கோளாறுகளுக்கான சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. விலா எலும்பு முறிவுகளை பழங்கால முறையை பின்பற்றிதான் பெரும்பாலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது சில நோயாளிகளுக்கு ஏற்றதாக இருந்தாலும் சில சிக்கல்கள் வருகிறது. குறிப்பாக அறுவை சிகிச்சைக்கு பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் நீண்ட காலம் தங்கி இருக்க வேண்டி உள்ளது. இந்த நிலையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த சிகிச்சை மையம் மூலம் விரைந்து விலா எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெறுவதுடன் சிகிச்சை நடைமுறையில் பெரிய தோல் காயங்கள் தவிர்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி நுரையீரல் சரிவு, தோலடி எம்பிஸிமா போன்ற நுணுக்கமான சிக்கலான பிரச்சனைக்கு சிறிய காயத்துடன் அறுவை சிகிச்சை செய்யப்படும். இதற்காக சிறப்பு வார்டு எதுவும் இல்லை. சிகிச்சைக்காக வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் மார்பு மற்றும் விலா எலும்புக்கு சிறப்பு சிகிச்சை மையம் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: