7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

சென்னை: தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைந்து வரும் நிலையில், 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வெயில் மற்றும் வெப்பத்தின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் 102 டிகிரி, திருச்சி, தர்மபுரி, மதுரை, வேலூர், திருத்தணி பகுதிகளில் 100 டிகிரி, சேலம், சென்னை, பாளையங்கோட்டையில் 99 டிகிரி வெயில் நிலவியது. இது தவிர பிற மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் குறைவாகவே இருந்தது.

அத்துடன் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. மேலும் குமரிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் நேற்று கனமழை
பெய்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றும் திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். இதேநிலை 19ம் தேதி வரை நீடிக்கும். இதற்கிடையே 22 மாவட்டங்களில் 16 மற்றும் 17ம் தேதிகளில் கனமழை பெய்யும். இந்நிலையில், 17ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை என்பது உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையும் வாய்ப்புள்ளது. வட மாவட்டங்களில் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

The post 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் appeared first on Dinakaran.

Related Stories: