பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 பவுன் நகை கொள்ளை

அலங்காநல்லூர்: மதுரை அருகே இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம், மீனாட்சிநகர் பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா (42). திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் உதய கண்ணன், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

விளாம்பட்டியில் பணி முடிந்ததும், ஷர்மிளா நேற்று இரவு மீனாட்சி நகரில் உள்ள வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, வீட்டினுள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சம்பவம் குறித்து அலங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சுமார் 250 பவுனுக்கு மேல் நகை மற்றும் ரூ.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இன்ஸ்பெக்டரின் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா தரப்பில் தனது வீட்டில் பீரோவில் 450 பவுன் நகை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

 

The post பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 பவுன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: