தேவர்குளம் காவல் நிலைய அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் மேலநீலிதநல்லூர் ஒன்றிய பகுதிகளில் சுமூகநிலையை ஏற்படுத்த நடவடிக்கை

*ராஜா எம்எல்ஏ தலைமையில் கலெக்டரிடம் மனு

சங்கரன்கோவில் : மேலநீலிதநல்லூர் ஒன்றிய பகுதிகளில் சுமூகநிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை கலெக்டரை சந்தித்து சங்கரன்கோவில் தொகுதி எம்எல்ஏ ராஜா தலைமையில் இந்தியா கூட்டணி கட்சியினர் மனு அளித்தனர்.சங்கரன்கோவில் தொகுதி எம்எல்ஏவும், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான ராஜா தலைமையில், இந்தியா கூட்டணி கட்சியினர் நேற்று நெல்லை கலெக்டர், எஸ்பியை சந்தித்து அளித்த மனு விவரம்:

தேவர்குளம் காவல் நிலையத்தில் சில அதிகாரிகளால் அப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. குறிப்பாக காவல் நிலையத்திற்கு வருகின்ற அரசியல்வாதிகள், சமூக நலஆர்வலர்கள், பொதுமக்கள் மரியாதை குறைவாக நடத்தப்படுகிறார்கள் என தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. சிலர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தேவர்குளம் காவல்நிலைய அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்டித்து வன்னிக்கோனந்தலில் சில அமைப்புகள் சார்பில் 8ம்தேதி சாலை மறியல் நடந்தது. இதை அமைதியான பேச்சுவார்த்தை மூலம் சுமுக முடிவுக்கு கொண்டு வராமல், வன்மத்தோடு பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் பங்கேற்ற பஞ்சாயத்து துணைத்தலைவர் வள்ளிநாயகம் உள்ளிட்ட 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை கண்டித்து 9ம்தேதி மானூர், தேவர்குளம், வன்னிக்கோனந்தல், பனவடலிசத்திரம், குருக்கள்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் முழுக்கடை அடைப்பு போராட்டம் நடந்தது. எனவே சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலநீலிதநல்லூர் ஒன்றிய பகுதிகளில் தேவர்குளம் காவல்நிலைய பிரச்சினைகளால் அசாதாரண சூழல் நிலவுகிறது.

எனவே கைதானவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தேவர்குளம் காவல்நிலைய அதிகாரிகள் மேல் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும், தற்காலிகமாக முதலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து, மக்களிடம் நல்ல அணுகுமுறை கொண்ட அதிகாரிகளை பணியமர்த்தி அமைதியான நிலையை ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

எம்எல்ஏவுடன் மதிமுக துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மதிமுக சுதா பரமசிவன், இந்திய கம்யூனிஸ்ட் இசக்கித்துரை, அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் கருப்பசாமி பாண்டியன், பார்வர்ட் பிளாக் சுப்பிரமணியன், ஆதித்தமிழர் பேரவை தென்னரசு, ஆதித்தமிழர் கட்சி ஆதவன், விசிக லிங்கவளவன், புலித்தேவன் மக்கள் கழகம் பெருமாள்சாமி, திமுக மாவட்ட பொருளாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் திமுக பெரியதுரை, பால்ராஜ், அன்பழகன், மதிமுக வேல்சாமி, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், வீமராஜ், பசுபதி பாண்டியன், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post தேவர்குளம் காவல் நிலைய அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் மேலநீலிதநல்லூர் ஒன்றிய பகுதிகளில் சுமூகநிலையை ஏற்படுத்த நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: