கோடை மழையால் பாதித்த குடும்பங்களுக்கு நிவாரணம் குடியாத்தம் அருகே

குடியாத்தம், மே 12: குடியாத்தம் அருகே கோடை மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோடை மழை பெய்தது. இதில் குடியாத்தம் அடுத்த வளத்தூர் கிராமத்தில் காற்றுடன் ஆலங்கட்டி மழை கொட்டியது. பலத்து காற்று மழையால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து சேதமானது. மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்படி, கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணமாக ஒரு மூட்டை அரிசி, மளிகை பொருட்கள் நேற்று வழங்கப்பட்டது. இதனை கிராம ஊராட்சிகள் பிரிவு பிடிஓ பெருமாள் பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது, ஊராட்சி செயலாளர் ரேவதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post கோடை மழையால் பாதித்த குடும்பங்களுக்கு நிவாரணம் குடியாத்தம் அருகே appeared first on Dinakaran.

Related Stories: