வீட்டில் தூங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபருக்கு தர்ம அடி

அண்ணாநகர்: முகப்பேரில் வீட்டில் தூங்கிய பெண்ணை கத்தி முனையில் மிரட்டி, செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை, பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர். முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி (40). அதே பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், நேற்று அதிகாலை வீட்டிற்குள் நைசாக புகுந்து, ஜெயந்தி கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலியை கழற்ற முயன்றுள்ளார்.

அப்போது, திடுக்கிட்டு எழுந்த ஜெயந்தி, வாலிபர் ஒருவர் செயினை கழற்ற முயற்சிப்பதை கண்டு அலறி கூச்சலிட முயன்றார். உடனே, அந்த மர்ம நபர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெயந்தியின் கழுத்தில் வைத்து, கத்தினால் குத்திவிடுவேன், என மிரட்டியுள்ளார். ஆனால், தன் உயிரை பொருட்படுத்தாமல் திருடன்… திருடன்… என்று கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த மர்ம நபரை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும் ஜெ.ஜெ.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், மர்ம நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், வினோத்குமார் (28) என்பது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

The post வீட்டில் தூங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபருக்கு தர்ம அடி appeared first on Dinakaran.

Related Stories: