முட்டுக்காட்டில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரூ.5 கோடியில் பிரமாண்ட மிதவை உணவகம்: விரைவில் திறக்க சுற்றுலாத்துறை திட்டம்

 

பூந்தமல்லி, மே 5: முட்டுக்காடு படகு குழாமில், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் பிரமாண்ட 2 அடுக்கு மிதக்கும் உணவகத்தை விரைவில் திறக்க சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், படகு குழாம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில் மிதவை படகுகள், இயந்திர படகுகள், வேகமான இயந்திர படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இங்கு, சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் முயற்சியாக, ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் 2 அடுக்கு மிதக்கும் உணவகம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இத்திட்டம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொச்சியை சேர்ந்த கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தனியார் மற்றும் பொது பங்களிப்பு திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் முதல் முறையாக மிதவை உணவக கப்பல் அமைக்கப்படுகிறது. இந்த மிதக்கும் உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. முதல் தளம் திறந்தவெளி தளமாகவும், சுற்றுலா பயணிகள் மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் சமயலறை, சேமிப்பு அறை, கழிவறை மற்றும் இயந்திர அறை (மோட்டார் இன்ஜின்) அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மிதவை கப்பல் 60 குதிரை சக்தி திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த பிரமாண்ட மிதவை உணவகம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ள நிலையில், இதனை விரைவில் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு திறக்க சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.

The post முட்டுக்காட்டில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரூ.5 கோடியில் பிரமாண்ட மிதவை உணவகம்: விரைவில் திறக்க சுற்றுலாத்துறை திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: