பரம்பரை சொத்துவரிக்கு எதிரான போராட்டம் ஒரு வேடிக்கை.. பாஜக தலைவர்கள் பொய்யை உண்மையாக்குகிறார்கள்: ப.சிதம்பரம்

சென்னை : பரம்பரை சொத்து வரி மற்றும் சொத்து மறு பங்கீடு என்ற ஒரு கற்பனை முன்மொழிவுகளுக்கு எதிராக போராட்டம் நடத்த இளம் மாணவர்கள் அணி திரட்டப்படுவது வேடிக்கையாகவும் கவலையாகவும் இருப்பதாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப .சிதம்பரம் கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்துக்களை பறித்து இஸ்லாமியர்களுக்கு பங்கீட்டு கொடுப்பார்கள் என்று பிரதமர் மோடி பிரச்சாரம் செய்து வரும் நிலையில் எக்ஸ் தளத்தில் ப.சிதம்பரம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பரம்பரை சொத்துவரிக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்களிடம் அது போன்ற ஒரு முன்மொழிவை நீங்கள் எங்கே பார்த்தீர்கள் என்று வடமாநில நிரூபர் கேள்வி எழுப்பியதையும் அந்த மாணவர்கள் பதில் அளிக்க இயலாமல் நின்றதையும் ப. சிதம்பரம் சுட்டிக் காட்டியுள்ளார்.

பிரதமர் மோடியும் பாஜக தலைவர்களும் அப்பட்டமான பொய்களை பரப்புவது மட்டுமல்ல எதற்கு எதிராக போராடுகிறோம் என்பதற்கான சிறு குறிப்பு கூட இல்லாத போராட்டக்கார்களை அணி திரட்டுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த செயல் ஒரு பொய்யை பலமுறை திரும்ப திரும்ப கூறும்போது அது உண்மையின் சாயலை பெறுகிறது என்ற Goebbelsian கோட்பாட்டை உறுதிப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த நாட்டை எது மாதிரியான தலைவர்கள் வழிநடத்துகிறார்கள் என்று கேள்வி எழுப்பிய சிதம்பரம் மாணவர்களை தூண்டுவது போராடுவதற்கான அடிப்படை உரிமையையும் ஜனநாயகத்தையும் கேலிக்கூத்தாகும் செயல் என்று சாடியுள்ளார்.

The post பரம்பரை சொத்துவரிக்கு எதிரான போராட்டம் ஒரு வேடிக்கை.. பாஜக தலைவர்கள் பொய்யை உண்மையாக்குகிறார்கள்: ப.சிதம்பரம் appeared first on Dinakaran.

Related Stories: