ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் பரபரப்பு மாஜி அமைச்சர் வீட்டில் கத்தியுடன் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள்

*போலீசை துப்பாக்கியுடன் பார்த்ததும் ஓட்டம்

திருமலை : ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் மாஜி அமைச்சர் வீட்டில் கத்தியுடன் நுழைந்த கொள்ளையர்கள் துப்பாக்கி ஏந்திய போலீசை கண்டதும் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், ஓங்கோலில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் சித்தா ராகவராவ் வீட்டில் கடந்த 26ம் தேதி இரவு நள்ளிரவு சித்தா ராகவராவின் வீட்டிற்குள் கைகுட்டையால் முகமூடி அணிந்தபடி 2 கொள்ளையர்கள் கத்தியுடன் நுழைந்தனர். அப்போது, வீட்டில் காவல் பணியில் இருந்த வாட்ச்மேன் துர்காபிரசாத் என்பவர் மீது தாக்குதல் நடத்தி கத்தியை கட்டி மிரட்டனர்.

இதனால் கூச்சலிட்ட வாட்ச்மேன் துர்கா பிரசாத்தின் சத்தம் கேட்டு அறையில் உறங்கிக் கொண்டிருந்த துப்பாக்கி ஏந்திய காவலர் விரைந்து வந்ததால், துப்பாக்கியை பார்த்து 2 கொள்ளையர்களும் அங்கிருந்து தப்பியோடினர்.இதுகுறித்து உடனடியாக முதலாவது நகர போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் விரைந்து வந்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் சித்தா ராகவராவின் மகனும், தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினருமான சுதிர் பாபு கூறுகையில், ‘இரண்டு கொள்ளையர்கள் கத்தியுடன் வீட்டிற்குள் நுழையும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. ஆனால் வீட்டில் எந்த பொருட்களும் திருடுபோகவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன்’ என கூறினர்.

ஆந்திராவில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கட்சி தலைவர்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபடுவதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் பரபரப்பு மாஜி அமைச்சர் வீட்டில் கத்தியுடன் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் appeared first on Dinakaran.

Related Stories: