மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய வழக்கு பின்னணி பாடகர் வேல்முருகன் கைது

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவன உதவி மேலாளரை தாக்கிய வழக்கில் பின்னணி பாடகர் வேல்முருகனை போலீசார் கைது செய்தனர். சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலை வேம்புலி அம்மன் கோயில் சிக்னல் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக நேற்று முன்தினம் இரவு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. அப்போது அவ்வழியாக பின்னணி பாடகர் வேல்முருகன் தனது காரில் வந்தபோது சாலையின் இடையே வைத்திருந்த தடுப்புகளை அகற்றிவிட்டு தனது காரை எடுத்து செல்ல முற்பட்டார்.

இதைப் பார்த்த மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவனத்தின் உதவி மேலாளர் வடிவேல், வேல்முருகனை வழிமறித்து இந்த வழியில் செல்லக் கூடாது என்று கூறியுள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறில் பாடகர் வேல்முருகன், உதவி மேலாளர் வடிவேலுவை தாக்கியதாக கூறப்பட்டது. இதுகுறித்து உதவி மேலாளர் வடிவேல் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் மீது 2 பிரிவுகளின் கீழ் பாடகர் வேல்முருகன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

The post மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய வழக்கு பின்னணி பாடகர் வேல்முருகன் கைது appeared first on Dinakaran.

Related Stories: