வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்

 

பழநி, ஏப்.24: வயல்வெளி பள்ளியின் விளைவுகள் குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். விவசாயிகள் வயல்வெளி பள்ளியின் மூலம் தனது வயலில் பூச்சி, நோயினை எதிர்த்து, சுற்றுச்சூழலை அனுசரித்து நன்கு வளர்ந்து நல்ல மகசூலைக் கொடுக்கக் கூடிய ரகத்தை தேர்ந்தெடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ளலாம். நட்டவுடன் பச்சை பிடிக்கும் வளமான நாற்றுகளை தயாரிக்க கற்றுக் கொள்ளலாம்.

தனது வயலில் மண் தன்மையிலேயே இயற்கை உரங்களையும், ரசாயன உரங்களையும், உயிர் உரங்களையும் சரியான விகிதத்தில் சேர்த்து, சரியான தருணத்தில் இட்டு, அதிக மகசூல் எடுக்க தெரிந்து கொள்ளலாம். பயிர் வளர்ச்சியில் பல முக்கிய பருவங்களைக் கண்டறிந்து அந்த பருவங்களில் செய்ய வேண்டிய செய்நேர்த்திகளை செய்ய அறிந்து கொள்ளலாம். பயிர் வளர்ச்சியில் எந்தெந்த பருவத்தில் களைகள் இருக்கக்கூடாது என தெரிந்து களைகளைக் கட்டுப்படுத்த தெரிந்து கொள்ளலாம்.

பயிரின் எந்த பருவத்திற்கு நீர்த்தேவை, எந்த பருவத்தில் நீர் தேவையில்லை என்பதை அறிந்து, அதன்படி நீர் மேலாண்மை செய்ய தெரிந்து கொள்ளலாம். தரமான மற்றும் அதிக மகசூலுக்கு சரியான தருணத்தில் அறுவடை செய்ய கற்றுக் கொள்ளலாம். விவசாயிகள் இதுதொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த பகுதி வேளாண் அலுவலர்களையோ, வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாமென வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ் appeared first on Dinakaran.

Related Stories: