மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

திருவள்ளூர், ஏப். 23: திருவள்ளூர் தனி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்றது. வாக்குப் பதிவுக்கு பின் அந்தந்த மண்டல அலுவலர்கள் சரிபார்க்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெட்டியில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வாக்குச்சாவடி மையங்களில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு பாதுகாப்பாக கொண்டு வரவைக்கப்பட்டது. இந்நிலையில் வாக்கு பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் திருவள்ளூர் நாடாளுமன்ற (தனி) தொகுதி பொது பார்வையாளர் அபு இமரான் மற்றும் மாவட்டத் தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளரின் முகவர்கள் ஒருவர் நியமிக்கப்பட்டு அவர்கள் கண்காணித்து வருகின்றனர். மேலும் வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தினை ஜூன் 4ம் தேதி வரை ஒரு வேளைக்கு 8 மணி நேரம் அடிப்படையில் 39 மத்திய எல்லை பிரிவில் 1 இன்ஸ்பெக்டர், 38 காவலர்களும், காவல்துறையில் 1 உதவி ஆணையர், 3 இன்ஸ்பெக்டர், 9 சப்இன்ஸ்பெக்டர், 24 காவலர்களும், 40 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும், 2 வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழக்க பிரிவு போன்ற 4 அடுக்கு காவல் படையினர் கொண்டு வாக்குச்சாவடி மையத்தினை கண்காணித்து வருகின்றனர்.

இதேபோல் 3 வேளைகளிலும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 228 கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குச்சாவடி மையத்தில் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து வாக்குச்சாவடி மையத்தினை 24 மணிநேரம் தொடர் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தினை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

The post மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: