வருசநாடு அருகே தரைப்பாலம் முழுவதும் பாசி பயத்துடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள்-மேம்பாலம் அமைக்க கோரிக்கை

வருசநாடு : வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட கீழபூசணியூத்து செல்லும் சாலையின் குறுக்கே அல்லால் ஓடை அமைந்துள்ளது. இந்த ஓடையின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் வருசநாடு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அல்லால் ஓடையில் கடந்த 3 மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. இதனால் தரைப்பாலம் முழுவதும் பாசிகள் வளர்ந்து காணப்படுகிறது. எனவே தரைப்பாலம் வழியாக செல்லும் பைக், ஆட்டோ, ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் பாசிகளால் வழுக்கப்பட்டு நிலைதடுமாறி விபத்தில் சிக்கி வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அதிக அளவு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. சிங்கராஜபுரம் கிராமத்தை கடந்து பூசணியூத்து, சாந்திபுரம், காந்திபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தரைப்பாலத்தில் பாசிகள் வளர்ந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதால் வெளியூர் செல்லும் பொதுமக்கள் மாற்றுப் பாதைகள் வழியாக பல கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை உள்ளது. பெரிய அளவிலான விபத்துக்கள் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தரைப்பாலத்தில் வளர்ந்துள்ள பாசிகளை அகற்ற வேண்டும். மேலும் தரைப்பாலத்தை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில்‌  புதிய மேம்பாலம்  கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post வருசநாடு அருகே தரைப்பாலம் முழுவதும் பாசி பயத்துடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள்-மேம்பாலம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: