அழகருக்காக ஆற்றில் ஏப்.19ல் தண்ணீர் திறப்பு: கரையோரங்களில் ஆய்வு

 

மதுரை, ஏப்.17: ஆற்றில் இறங்கும் அழகருக்காக ஏப்.19ம் தேதி வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ள நிலையில், ஆற்றுக் கரை பகுதிகளை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். மதுரையின் மகத்தான சித்திரைப் பெருவிழா ஏப்.12ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. 12 நாட்கள் மீனாட்சி கோயில் திருவிழாவுடன், 10 நாட்களின் அழகர்கோவில் திருவிழாவும் கைகோர்த்து மதுரை நகர், புறநகர் பகுதிகளில் கொண்டாட்டம் கொள்ளும்.

இவ்வகையில் ஒரே நேரத்தில் 12 லட்சம் மக்கள் ஓரிடத்தில் கூடும் ஓர் ஒப்பற்ற விழாவாக கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஏப்.23ல் நடக்கிறது. ஆண்டுதோறும் இதற்கென வைகை அணையிலிருந்து ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். இதையொட்டி மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்கென தேர்தல் நாளான ஏப்.19ம் தேதியன்று தண்ணீர் திறந்துவிடப்படும் என்று பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. இது மதுரை மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில் ஆற்றில் தண்ணீர் முறையாக வந்து சேரும் வகையில் ஆற்றுக்கரை பகுதிகளை பொதுப்பணித்துறை குழுவினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

The post அழகருக்காக ஆற்றில் ஏப்.19ல் தண்ணீர் திறப்பு: கரையோரங்களில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: