வாக்குச்சாவடிகளுக்கு பொருட்கள் தயார் செய்யும் பணிகள் தீவிரம்

 

கோவை, ஏப். 16: தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் பொருத்தப்பட்டு, பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த கூடிய பொருட்கள், சம்மந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இதனை ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் அனுப்ப தயார் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படும் பொருட்கள் பிரித்து வைக்கும் பணி பாலசுந்தரம் ரோட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்து வருகிறது. இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில், கோவை, பொள்ளாச்சி ஆகிய 2 பாராளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 3,096 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் முத்திரைகள், அழியாத மை, பென்சில்கள், பேனாக்கள், ஏ4 பேப்பர்கள், மெழுகுவர்த்திகள், நூல், கிளிப், கவர்கள் உள்பட 96 வகையான பொருட்கள் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டு, 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு உள்ளது.

தற்போது, அங்கிருந்து ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் தனியாக பொருட்கள் பிரித்து வைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் வரும் 17ம் தேதி முடிக்கப்படும். பின்னர், 18ம் தேதி காலை முதல் இந்த பொருட்களுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் சேர்த்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வாக்குச்சாவடிகளுக்கு பொருட்கள் தயார் செய்யும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: