அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: 20ம் தேதி தேரோட்டம்

 

மதுராந்தகம், ஏப்.15: அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. வரும் 20ம் தேதி தேரோட்டம் நடக்கவுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் உள்ள ஆட்சீஸ்வரர் கோயில் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டு, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி ஆகிய நால்வரால் பாடப்பெற்று புகழ்பெற்று திகழ்ந்து வருகிறது. ஆண்டுதோறும் இக்கோயிலில் சித்திரை பெருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று காலை மங்கல இசையுடன் ஆட்சீஸ்வரர், இளங்கிளி அம்மன், நந்தி ஆகிய சாமிகளுக்கு அபிஷேக ஆராதணை நடைபெற்றது. இதனையடுத்து, காலை 7.25 மணி முதல் 9 மணிக்குள்ளாக ராஜகோபுரம் அருகில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில், சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றி வைத்து சித்திரை திருவிழாவை தொடங்கி வைத்தனர்.  இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து சூரிய பிரபை, அதிகார நந்தி, திருமுல்லைப்பால் உற்சவம், 63 நாயன்மார்கள், உற்சவம், அன்னவாகனம், யாழிவாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை 19ம் தேதிவரை நடைபெறுகிறது. 20ம் தேதி காலை 9 மணி அளவில் தேர் திருவிழா நடைபெற உள்ளது.

மேலும், தொட்டி உற்சவம், தீர்த்தவாரி, அகஸ்தியருக்கு காட்சி கொடுத்தல், விடையாற்றி உற்சவம் உள்ளிட்ட உற்சவ நிகழ்ச்சிகள் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர். திருவிழாவையொட்டி, ராஜகோபுரம், உள்பிரகார சன்னதிகள் ஆகியவை வண்ண விளக்குகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

The post அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: 20ம் தேதி தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: