குரும்பலூர் செகுடப்பர் கோயில் திருவிழா: பல்வேறு வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

 

சிங்கம்புணரி, ஏப். 10: சிவகங்கை அருகே, கோயில் திருவிழாவில் பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் குரும்பலூர் கிராமத்தில் செகுடப்பர் கோயில் பங்குனி திருவிழா 2 நாட்கள் நடைபெற்றன. விழாவில் செகுடப்பர் அய்யனார் மற்றும் கருப்ப சுவாமிக்கு மாவிளக்கு வைத்தும், கரும்பு தொட்டில் எடுத்தும் பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை புலி குத்தும் விழா நடைபெற்றது.

இதில் குரும்பலூர் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி, போலீஸ், மூதாட்டி உள்ளிட்ட வேடமணிந்து கோவில் முன்பு கூடினர். பின்னர் புலி வேடமிட்ட நபரை சாமியாட்டத்துடன் செகுடப்பர் கோயிலுக்கு அழைத்து வந்தனர். அங்கு அய்யனார் கோயிலில் பக்தர்கள் உடல் முழுவதும் சேறுபூசி, புலிக்குத்தும் வேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பக்தர்கள் உடல் முழுவதும் சேற்றை பூசி, வைக்கோல் பிரியுடன் புலி ஆட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அய்யனார் மற்றும் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து ஆண்டுதோறும் இவ்விழாவில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

The post குரும்பலூர் செகுடப்பர் கோயில் திருவிழா: பல்வேறு வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Related Stories: