தார்வார்: மக்களவை தேர்தலில் தார்வார் தொகுதியில் ஒன்றிய கனிமவளத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு எதிராக, ஷிரஹட்டி பகீரேஷ்வர மடத்தின் மடாதிபதி திங்கலேஷ்வரசுவாமி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் தார்வார் மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒன்றிய கனிமவளத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி போட்டியிடுகிறார். இவர், லிங்காயத்து, குருபர் உள்ளிட்ட மடங்களின் மடாதிபதிகளை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக புகார் உள்ளது. இந்நிலையில் அமைச்சருக்கு எதிராக மடாதிபதி ஒருவரை தேர்தல் களத்தில் நிறுத்துவது தொடர்பாக மூருசாவிர மடத்தில் குருசித்தராஜயோகிந்திரசுவாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மடாதிபதிகள் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர். இதில் மடாதிபதி பகீர திங்கலேஷ்வர சுவாமிகள் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
கூட்டம் முடிந்த பின் பகீர திங்கலேஷ்வரசுவாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘பிரகலாத்ஜோஷிக்கு அதிகாரம் என்ற போதை அதிகமாக ஏறியுள்ளது. இதனால் மடாதிபதிகளுக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக இருக்கிறார். அதேபோல் பெண் மடாதிபதியான உமாபாரதி மத்திய பிரதேச மாநில முதல்வராகவும் இருந்தார் நான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு செல்லக்கூடாதா ? என்றார்.
The post பாஜ கலக்கம்: ஒன்றிய அமைச்சருக்கு எதிராக மடாதிபதி போட்டி appeared first on Dinakaran.