குறிப்பிட்ட நேரத்தில் கண்காணித்து வாக்குப்பதிவுக்கான பொருட்கள் செல்வதை உறுதி செய்ய வேண்டும் மண்டல அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

வேலூர், ஏப்.4: வாக்குப்பதிற்கு தேவையான அனைத்து பொருட்களும் குறிப்பிட்ட நேரத்தில் சென்றதா? என கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று வேலூரில் நடந்த மண்டல அலுவலர்களுடான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சுப்புலட்சுமி பேசினார். நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வேலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள 20 மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் வேலூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது: இந்த வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முதியோர் வாக்களிக்க ஏதுவாக சாய்தள வசதி போன்ற அடிப்படை வசதிகள் சீராக உள்ளனவா என உறுதி செய்ய வேண்டும். வாக்குப்பதிவு தினத்தன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடி அலுவலர்களிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும். தேவையான உதவிகளை செய்ய 25 மண்டல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

ஒரு மண்டல குழுவில் 1 மண்டல அலுவலர், 1 உதவி மண்டல அலுவலர், 1 உதவியாளர் மற்றும் 1 காவலர் ஆகியோர் பணியில் இடம் பெறுகிறார்கள். மண்டல அலுவலர்கள் தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் முடியும் வரை தேர்தலில் மிகவும் முக்கிய பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு மண்டல அலுவலருக்கும் 10 முதல் 12 வாக்குச்சாவடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மண்டல அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து அடிப்படை தேவைகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் உடனடியாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் மூலமாக தகவல் தெரிவித்து அதனை சீர் செய்ய வேண்டும்.

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு வருகின்ற வரும் 7ம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் மண்டல அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வாக்குச்சாவடியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்தும் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான வாக்குச்சாவடி பணி ஒதுக்கப்படும் விவரம் குறுஞ்செய்தி வாயிலாகவும் அனுப்பப்படவுள்ளது. வாக்குப்பதிவிற்கு தேவையான அனைத்து பொருட்களும் குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைவதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று காலையில் வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய வேண்டும். மாற்று இயந்திரங்களை கொண்டு வாக்குப்பதிவு தொடங்குவதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றும்போது தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகளை பின்பற்றி கவனமாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா, தாசில்தார் கோபி மற்றும் மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post குறிப்பிட்ட நேரத்தில் கண்காணித்து வாக்குப்பதிவுக்கான பொருட்கள் செல்வதை உறுதி செய்ய வேண்டும் மண்டல அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: