சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய கூட்டம்: 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. சுமார் 3 நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை சிறுவாபுரி கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.

அந்த வகையில் நேற்று கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை முதலே திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். கடந்த சில மாதங்களாகவே சிறுவாபுரி முருகன் கோயிலில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பொது தரிசனம், கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோயிலுக்கு வெளியே 1 கி.மீ தூரம் கடும் வெயிலில் நீண்ட வரிசையில் வந்து, காத்திருப்பு மண்டபம் வழியே கோயிலுக்குள் வந்து சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

The post சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய கூட்டம்: 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: