வேட்பாளர் பெயரை மாற்றி கூறிய எடப்பாடி பொதுக்கூட்டம் அருகே தீ விபத்து

புதுச்சேரி: புதுச்சேரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து உப்பளம் புதிய துறைமுக மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். பேசத் தொடங்கும் போது, மாநில செயலாளர் பெயர் தெரியாமல் தடுமாறிய எடப்பாடி, பின்னர் நோட்டீசை பார்த்து வரிசையாக நிர்வாகிகளின் பெயரை வாசித்தார். அப்போது கட்சியில் இருந்து விலகி, தனிக்கட்சி நடத்தி வரும் பேராசிரியர் மு.ராமதாஸ் பெயரையும் சேர்த்து வாசித்தார். அதேபோல் அதிமுக வேட்பாளர் பெயரையும் தமிழ்வேந்தன் என்பதற்கு பதிலாக தமிழ்ச்செல்வன் என 2 முறை தவறுதலாக கூறினார்.

அப்போது மேடை ஏறாமல் காத்திருந்த வையாபுரி மணிகண்டன், எடப்பாடி வந்ததும் அவருடன் சேர்ந்து மேடை ஏறினார். இதைப் பார்த்து மேடை எதிரே கீழே அமர்ந்திருந்த சிலர், வையாபுரி கீழே இறங்கு என கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மேடையிலே நின்றிருந்த அவர், தனியாக பிளாஸ்டிக் சேர் கொண்டு வந்து முன்வரிசை ஓரத்தில் போட்டு அமர்ந்தார். இதனிடையே எடப்பாடி பேசிக் கொண்டிருந்தபோது, பொதுக்கூட்ட மைதானம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்து மக்கள் பதற்றத்துடன் எழுந்ததும், எடப்பாடி சிறிதுநேரம் பேச்சை நிறுத்தினார். பின்னர் குப்பைமேடு என தெரியவந்ததும், குப்பை தான்… எல்லோரும் அமருங்கள்… எனக்கூறி எடப்பாடி பழனிசாமி பேச்சை தொடர்ந்தார்.

The post வேட்பாளர் பெயரை மாற்றி கூறிய எடப்பாடி பொதுக்கூட்டம் அருகே தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: