தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

ஈரோடு, மார்ச் 28: தொடக்க கல்வி பட்டயத்தேர்வு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெருந்துறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையம் வழியாக விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, அவ்விண்ணப்பத்தினை பூர்த்திச் செய்து ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் கண்டிப்பாக இணைத்து வருகின்ற 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை மாலை 5 மணிக்குள் பெருந்துறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேரடியாக சமர்பிக்க வேண்டும்.

தேர்வுக்கட்டணமாக ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50. மதிப்பெண் சான்றிதழ்களுக்கு ஒவ்வொரு ஆண்டிற்கும் தலா ரூ.100 மற்றும் பதிவு சேவைக் கட்டணம் ரூ.15, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.70 செலுத்த வேண்டும். அறிவிக்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தில் 8ம் தேதி முதல் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். தகுதியற்ற தேர்வர்களின் விண்ணப்பங்கள் பெறப்படுமெனில் எவ்வித முன்னறிவிப்பு இன்றி தேர்வு அனுமதி ரத்து செய்யப்படும். தபால் வழி பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: