அளவுக்கு அதிகமாக மது குடித்த பீகார் மாநில தொழிலாளி சாவு

ஈரோடு, மார்ச் 28: பீகார் மாநிலம், பதேபூர், அனந்த்சோக் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திர மஞ்சி (48). இவரது மகன் கமலேஷ்குமார் (21). இவர்கள் இருவரும் கடந்த 4 மாதங்களாக ஈரோடு மாவட்டம், லக்காபுரம் அருகே உள்ள கருக்கம்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பிளாஸ்டிக் கம்பெனியில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். ஹோலி பண்டிகையையொட்டி கம்பெனியில் 3 நாள் விடுமுறை விடப்பட்டது. ஆனால் மகேந்திர மஞ்சி, கமலேஷ்குமார் ஆகிய இருவரும் சொந்த ஊருக்குச் செல்லவில்லை.

ஹோலி பண்டிகை என்பதால் கடந்த 2 நாள்களாக மகேந்திர மஞ்சி அதிக அளவில் மது குடித்துவிட்டு, சாப்பாடு எதுவும் சரிவர சாப்பிடாமல் இருந்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் மகேந்திர மஞ்சி மது போதையில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். மாலை சுமார் 5 மணியளவில் அவரது மகன் கமலேஷ்குமார் அவரை எழுப்பச் சென்றபோது, மகேந்திர மஞ்சி அசைவற்ற நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே மகேந்திர மஞ்சி இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இது குறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post அளவுக்கு அதிகமாக மது குடித்த பீகார் மாநில தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Related Stories: