போளூர் அடுத்த வடமாதிமங்கலம் கிராமத்தில் முத்தாலம்மன், கர்கியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

போளூர், மார்ச் 28: போளூர் அடுத்த வடமாதிமங்கலம் மதுர ஒதியந்தாங்கல் கிராமத்தில் முத்தாலம்மன், கர்கியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா வடமாதிமங்கலம் மதுரா ஓதியந்தாங்கல் கிராமத்தில் முத்தாலம்மன், கர்கியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த கோயில் புதியதாக புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் ஐங்கரன் வேள்வி, திருமகள் வழிபாடு, நவகோள் வழிபாடு, தெய்வ படிமங்களை நிறுவுதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து நேற்று திருப்பள்ளி எழுச்சி, இரண்டாம் கால வேள்வி, கலை ஈர்ப்பு வழிபாடு, திருக்குடங்கள் பிறப்பாடு புனித கலசங்களுக்கு பூஜைகள் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க இரண்டாம் காலயாக பூஜைகளுடன் விசேஷ ஹோமங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து முத்தாலம்மனுக்கு கர்கியம்மன் கலச புனித நீரினை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து சாமி சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர். சந்திரசேகர்உண்ணாமலை சேவை அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.வி.சேகரன், ஒன்றிய குழு உறுப்பினர் கு.சாமூண்டீஸ்வரிகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ர.அல்லிரவி மற்றும் கீழ்பட்டு, உட்பட 20 கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post போளூர் அடுத்த வடமாதிமங்கலம் கிராமத்தில் முத்தாலம்மன், கர்கியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: