பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

 

தியாகதுருகம், மார்ச் 25: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள வீரசோழபுரம் கிராமத்தில் கோமுகி நதிக்கரையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இத்திருவிழா மார்ச் 15ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இந்நிலையில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான முருகபெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

காலை முதல் பாலசுப்பிரமணியசுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை மணிமுக்தா நதிக்கரையில் பாலசுப்பிரமணிய சுவாமி குதிரை வாகனத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு எழுந்தருளினார். பின்னர் தாரகாசூரனை குதிரை வாகனத்தில் எழுந்தருளிய முருகபெருமான் தன்னுடைய வேல் கொண்டு வதம் செய்தார்.

தொடர்ந்து கோயிலுக்கு சென்று பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் வள்ளி தெய்வானைக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்த திருக்கல்யாணத்தை காண தியாகதுருகத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சுவாமி திருவீதிஉலாவும் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது. இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியை காண தியாகதுருகம், கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா அரோகரா என்ற கோஷங்களை எழுப்பியவாறு சாமி தரிசனம் செய்தனர்.

The post பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் appeared first on Dinakaran.

Related Stories: