புளியந்தோப்பில் முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பிக்கு சரமாரி வெட்டு: கும்பலுக்கு போலீஸ் வலை

பெரம்பூர்: புளிந்தோப்பில் முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பியை கத்தியால் சரமாரி வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை புளியந்தோப்பு வஉசி நகர் 6வது தெருவை சேர்ந்தவர் மினோர் மோசஸ் (50). இவரது அண்ணன் ஆசை தம்பி (55). இருவரும் பெயிண்டிங் வேலை செய்து வருகின்றனர். மோசஸுக்கும் அதே பகுதியை சேர்ந்த பீட்டர் என்பவருக்கும் கடந்த 15 வருடங்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் மினோர் மோசஸ், ஆசைத்தம்பி ஆகியோர் தங்களது வீட்டின் வெளியில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கு போதையில் வந்த பீட்டர் மற்றும் அவரது கூட்டாளிகள், அண்ணன், தம்பி இருவரிடமும் வாக்குவாதம் செய்துள்ளனர். வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த கும்பல், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மோசஸ், ஆசைத்தம்பி ஆகியோரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் இருவரும் பலத்த காயமடைந்து மயக்கி விழுந்தனர். இதை பார்த்துஅதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் படுகாயத்துடன் இருந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களின் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் 20க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளது. இதில், மோசஸ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து பீட்டர் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post புளியந்தோப்பில் முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பிக்கு சரமாரி வெட்டு: கும்பலுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Related Stories: