திமுக வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும் காட்பாடியில் துரைமுருகன் பேட்டி காங்கிரசுடன் பேச்சுவார்த்தை முடிந்ததும்

வேலூர், மார்ச் 14: காங்கிரசுடன் பேச்சுவார்த்தை முடிந்ததும் திமுக வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டக சாலையின் சார்பில் ₹3 கோடி மதிப்பீட்டில் புதிதாக பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பெட்ரோல் பங்க்கை திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: எப்போதாவது கர்நாடக அமைச்சர்கள் தமிழகத்திற்கு தண்ணீர் விடுவோம் எனக்கூறியிருக்கிறார்களா? அவர்கள் எப்போதுமே தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது எனக்கூறுவதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் சென்று தமிழகத்திற்கு தண்ணீரை பெற்று வருகிறோம். கர்நாடகாவிடம் இருந்து தமிழகத்திற்கு தண்ணீரை எப்படி பெற வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ராஜ்யசபாவில் அதிமுக எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்த சட்டம் வந்திருக்காது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை முடிந்ததும் திமுக வேட்பாளர் பட்டியலை நாளை (இன்று) அல்லது நாளை மறுதினத்திற்குள் வெளியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post திமுக வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும் காட்பாடியில் துரைமுருகன் பேட்டி காங்கிரசுடன் பேச்சுவார்த்தை முடிந்ததும் appeared first on Dinakaran.

Related Stories: