ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: பைனலுக்கு முன்னேறியது விதர்பா

நாக்பூர்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில் 62 ரன் வித்தியாசத்தில் மத்திய பிரதேசத்தை வீழ்த்திய விதர்பா அணி பைனலுக்கு முன்னேறியது. தமிழ்நாடு அணியுடன் நடந்த 2வது அரையிறுதியில், 3வது நாளிலேயே வெற்றியை வசப்படுத்திய மும்பை அணி ஏற்கனவே பைனலுக்கு முன்னேறி விட்டது. நாக்பூரில் நடந்த முதல் அரையிறுதியில் விதர்பா – மத்தியபிரதேசம் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் விதர்பா 170 ரன்னும், மத்திய பிரதேசம் 252 ரன்னும் எடுத்தன.

82 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய விதர்பா, யஷ் ரத்தோடின் அபார ஆட்டத்தால் 402 ரன் குவித்தது. இதைத் தொடர்ந்து, 321 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மத்திய பிரதேசம் 4வது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 228 ரன் எடுத்திருந்தது (71 ஓவர்). சரண்ஷ் ஜெயின் (16), குமார் கார்த்திகேயா (0) இருவரும் நேற்று கடைசி நாள் ஆடத்த்தை தொடங்கினர்.

கார்த்திகேயா டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அடுத்து வந்த அனுபவ் அகர்வால் 0, குல்வந்த் கஜ்ரோலியா 11 ரன்னில் வெளியேறினர். சரண்ஷ் 25 ரன்னில் ஆட்டமிழக்க நேற்று 10 ஓவர்களிலேயே மத்திய பிரதேசத்தின் 2வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அந்த அணி 81.3 ஓவரில் 258 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாக, விதர்பா 62 ரன் வித்தியாசத்தில் வென்றது. ஆவேஷ் கான் 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வித்ர்பா தரப்பில் யாஷ் தாகூர், அக்‌ஷய் வாக்கரே தலா 3, ஆதித்யா சர்வதே, ஆதித்யா தாக்கரே தலா 2 விக்கெட் வீழத்தினர்.

இந்த வெற்றியின் மூலம் விதர்பா 3வது முறையாக ரஞ்சி கோப்பை பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. விதர்பா 2வது இன்னிங்சில் 140 ரன் விளாசிய யாஷ் ரத்தோட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மும்பை வாங்கடே மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்கும் இறுதிப் போட்டியில் (மார்ச் 10) மும்பை – விதர்பா அணிகள் மோதுகின்றன.

The post ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: பைனலுக்கு முன்னேறியது விதர்பா appeared first on Dinakaran.

Related Stories: