மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில்தான் விசிக போட்டியிடும், இதில் எந்த மாற்றமும் கிடையாது: திருமாவளவன் திட்டவட்டம்!

சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும், இதில் எந்த மாற்றமும் கிடையாது என விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளதாவது;

“தேர்தல் பணிகள் தொடர்பாக 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயர்நிலை கூட்டம் நடைபெற்றாததால் திமுக உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு செல்ல முடியவில்லை. தொகுதி பங்கீடு குறித்து தேவைப்பட்டால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசுவோம்.

திமுகவிடம் 3 தொகுதிகள் கேட்போம், 2 தனித்தொகுதிகள், ஒரு பொதுத்தொகுதி கேட்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்போம், எந்த குழப்பமும் இல்லை. திமுக கூட்டணியில் எந்த ஊசலாட்டமும் இல்லை, திமுக – காங்கிரஸ் கூட்டணியில் ஏதேனும் இடைவெளி ஏற்படும் என நினைத்து, அதில் நுழையலாம் என யாரும் காத்திருக்க வேண்டிய தேவையில்லை, திமுக தலைமையில் தேர்தலை சந்திப்பதில் உறுதியாக உள்ளோம்.

திமுக கூட்டணியில் இடைவெளி வரும் என்று யாரும் இலவு காத்த கிளி போல காத்திருக்க வேண்டாம். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும், இதில் எந்த மாற்றமும் கிடையாது” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

The post மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில்தான் விசிக போட்டியிடும், இதில் எந்த மாற்றமும் கிடையாது: திருமாவளவன் திட்டவட்டம்! appeared first on Dinakaran.

Related Stories: