கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர். உடனுறை அமராவதி அம்மன் ஆலயம் இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்டது. இந்த ஆலயத்தில் ஒரு கால பூஜை தினசரி நடைபெற்று வருகிறது. விழா காலங்களில் மற்றும் முகூர்த்த தினங்களில் பூஜை, நடை திறப்பு மாறுதலுக்கு உட்பட்டது. முகூர்த்த தினங்களில் ஏராளமான பக்தர்கள் ஆலயம் வந்து செல்கிறார்கள். மேலும் பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, கந்தசஷ்டி, சிவராத்திரி, மார்கழி மாத பஜனை போன்றவை சிறப்பாக நடைபெறும். ஆண்டு ஒன்றுக்கு குறைந்தபட்சமாக நூறு திருமணங்கள். காதுகுத்து நிச்சயதார்த்தம் போன்ற விஷேசங்கள் நடைபெற்று வருகிறது. கந்தர்வகோட்டை பகுதியில் ஒரு முக்கிய கோயிலாக இது உள்ளது. ஆடி பெருக்கு அன்று ஏராளமான புதுமண தம்பதிகள் வந்து இறையருள் பெற்று செல்லுவார்கள். இவ்வாறு சிறப்புமிக்க ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் செய்ய 15 லட்சம் தமிழகஅரசு ஒதுக்கீடு செய்து திருப்பணி நடைபெற்று வருகிறது. திருப்பணி நடைபெறும் போது ஆலயம் அருகில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக குளியல் அறையுடன் கூடிய கழிப்பறை கட்டித் தர வேண்டும் என ஆண், பெண் பக்தர்கள் தமிழக அரசுக்கும், இந்துசமப அறநிலை துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைக்கிறார்கள். பக்தர்கள் கூறும்போது புதிய வீடு கட்டுவதற்கு அனுமதி கேட்கும் போது கழிவறை உட்பட அனைத்து வசதிகளை சோதனை செய்யும் நிர்வாகம் கோவில் கட்டும்போது கழிவறை உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post கந்தர்வகோட்டை சிவன் கோயிலில் திருப்பணி விறுவிறுப்பு appeared first on Dinakaran.