ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தொழிலாளர் சங்கங்கள் மறியல்: 127 பேர் கைது

 

தேனி, பிப். 17: தொழிலாளர் விரோத சட்டங்களை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தேனியில் தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தேனி நகர் நேரு சிலை அருகே ஐடியு, தொமுச, ஏஐடியுசி, ஏஐயூடியூசி , டியுசிசி, யூடியூசி ஆகிய தொழிற்சங்கங்களின் சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ஞானவேல் தலைமை வகித்தார்.

சிஐடியு மாவட்ட பொருளாளர் சண்முகம், தொமுச அமைப்புசாரா மாவட்ட செயலாளர் கணேசன், டியூசிசி மாவட்ட செயலாளர் காசிமாயன், ஏஐயூடியூசி மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி, யூடியூசி மாநில குழு உறுப்பினர் ராஜதுரை முன்னிலை வகித்தனர். மறியல் போராட்டத்தின்போது, பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு வேளாண் திருத்த சட்ட மசோதா கொண்டு வந்ததை கண்டித்தும், தொழிலாளர்கள் சட்டங்களில் திருத்தம் செய்ததை கண்டித்தும், மின்சார வாரியத்தை தனியார் மையம் ஆக்குவதை கண்டித்தும் கோஷங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தேனி போலீசார் மறியலில் ஈடுபட்ட 57 பெண்கள் உள்பட 127 பேரை கைது செய்தனர். முன்னதாக, போராட்டக்குழுவினர் தேனி நகர் கொட்டக்குடி ஆற்று பாலம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நேரு சிலை வரை ஊர்வலமாக வந்தனர். இப்போராட்டத்ததால் இப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தொழிலாளர் சங்கங்கள் மறியல்: 127 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: