பூந்தமல்லியில் தனியார் பெண்கள் விடுதி அருகே குப்பை தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு: போலீஸ் தீவிர விசாரணை

பூந்தமல்லி: பூந்தமல்லி தனியார் பெண்கள் விடுதி அருகில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தவறான உறவு முறையில் பிறந்த குழந்தை என்பதால் வீசிவிட்டு சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பூந்தமல்லி ராமானுஜகூடத்தெருவில் தனியாருக்கு சொந்தமான பெண்கள் விடுதி உள்ளது. இதனருகிலேயே குப்பை கொட்டும் இடம் உள்ளது. இந்த பகுதியில் இருந்து பூனை அழுவது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அலட்சியமாக இருந்துள்ளனர். நேற்று இரவு சத்தம் அதிகமாக கேட்டதால் அதே பகுதியை சேர்ந்த யுவராணி என்ற பெண் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார்.

அப்போது பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை துணி இல்லாமல் குப்பை தொட்டியில் எறும்புகள் உடலில் மொய்த்த நிலையில் அழுதுகொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.உடனடியாக அப்பகுதி மக்கள் உதவியுடன் குப்பைதொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிவிட்டு சென்றது யார்? என விசாரித்து வருகின்றனர். மேலும் குழந்தையை 2 தினங்களுக்கு முன்பு குப்பை தொட்டியில் வீசிவிட்டு சென்றதும் குழந்தை அழுதபடி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பெண் குழந்தை என்பதால் குப்பை தொட்டியில் வீசிவிட்டு சென்றார்களா? அல்லது தவறான உறவில் பிறந்த குழந்தை என்பதால் வீசினார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பிறந்த சில தினங்களேயான பெண் குழந்தை குப்பை தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் பூந்தமல்லி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பூந்தமல்லியில் தனியார் பெண்கள் விடுதி அருகே குப்பை தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை மீட்பு: போலீஸ் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: