காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பக்கோரி தஞ்சாவூரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

தஞ்சாவூர், பிப்.14: கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.தஞ்சை பனகல் கட்டிடம் அருகே நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். மாநில பிரசார செயலாளர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தார். அனைத்து மருந்தாளர்கள் சங்கம் பாஸ்கரன், முருகன், அஜய் ராஜ் ஆகியோர் விளக்க உரையாற்றினர்.இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதி திருத்த ஆணையை உடன் வெளியிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும்.

இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகியோருக்கிடையே ஒருங்கிணைந்த முதுநிலை நிர்ணயம் செய்வதில் ஏற்படுத்தப்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்திட மனிதவள மேலாண்மைத்துறை மூலமாக உரிய தெளிவுரை வழங்கிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடன் நிரப்பிட வேண்டும். அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் உண்ணாவிரத போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பக்கோரி தஞ்சாவூரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Related Stories: