சேலம், கோவை வழியே கேரளாவிற்கு ரூ.1 கோடிக்கு விலை பேசி ரயிலில் கடத்திய மண்ணுளி பாம்பு சிக்கியது: மோசடி கும்பல் தப்பியோட்டம்

சேலம்: சேலம், கோவை வழியே கேரளாவிற்கு ரூ.1 கோடிக்கு விலை பேசி ரயிலில் கடத்தி வரப்பட்ட 4.2 அடி நீளமுள்ள மெகா சைஸ் மண்ணுளி பாம்பை ஆர்பிஎப் குற்றப்பிரிவு போலீசார் மீட்டனர். போலீஸ் சோதனையை பார்த்து தப்பியோடிய மோசடி கும்பல் பற்றி விசாரித்து வருகின்றனர்.வடமாநிலங்களில் இருந்து சேலம், ஈரோடு, கோவை வழியே கேரளாவிற்கு செல்லும் ரயில்களில் சட்டவிரோத பொருட்களான போதை புகையிலை, கஞ்சா, கஞ்சா ஆயில், அபின் உள்ளிட்ட போதை பவுடர்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை முற்றிலும் தடுத்து, கடத்தல் கும்பலை கைது செய்ய சேலம் கோட்ட ஆர்பிஎப் குற்றப்பிரிவு போலீசாரும், தமிழ்நாடு ரயில்வே போலீசாரும் தொடர்ந்து ரயில்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தவகையில் நேற்று மாலை, சேலம் ஆர்பிஎப் குற்றப்பிரிவு போலீசார் மற்றும் கோவை ஆர்பிஎப் குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய குழுவினர், நியூடெல்லி-திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் (12626) ரயிலில் ஏறி தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சேலத்தில் இருந்து ஏறி ஒவ்வொரு பெட்டியாக பரிசோதித்த நிலையில், கோவைக்கு ரயில் சென்றடைந்தது.அங்கு 1ஏ பிளாட்பார்ம்மில் ரயில் நின்றபோது, பின்பக்க முன்பதிவில்லா பெட்டியில் ஏறி சோதனையிட்டனர். அப்போது கழிவறை அருகே கேட்பாரற்று ஒரு பேக் கிடந்தது. அந்த பேக்கிற்குள் ஏதோ ஒரு பொருள் நெளிவது போல் இருந்தது. இதனால், சந்தேகம் கொண்ட ஆர்பிஎப் போலீசார், அந்த பேக்கை எடுத்து திறந்து பார்த்தனர். அதனுள் மெகா சைஸ் மண்ணுளி பாம்பு இருந்தது. அதனை மோசடி கும்பல், கேரளாவிற்கு கடத்திச் செல்வது தெரியவந்தது.

உடனே அந்த மண்ணுளி பாம்பை கைப்பற்றி, கடத்தி வந்த நபர்களை அறிய அப்பெட்டியில் இருந்த பயணிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், போலீசார் சோதனை நடத்தி வருவதை பார்த்த மோசடி கும்பல், அந்த பேக்கை கழிவறை அருகே போட்டுவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சிக்கிய மண்ணுளி பாம்பை கோவை ஆர்பிஎப் போலீசில் ஒப்படைத்தனர். அந்த பாம்பு 4.2 அடி நீளத்தில் 5 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இந்த பாம்பை கேரளாவிற்கு கொண்டு சென்று ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை செய்ய மோசடி கும்பல் திட்டமிட்டிருப்பது தெரியவந்தது. சந்தேக நபர்கள் சிலரை ஆர்பிஎப் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை பிடிக்க தொடர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே 4.2 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பை கோவை வனத்துறையில் ஆர்பிஎப் போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள் தனியாக வழக்குப்பதிவு செய்து, இந்த மண்ணுளி பாம்பை கடத்தி வந்த மோசடி கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திரா அல்லது சேலம், ஈரோட்டில் இருந்து இந்த பாம்பை கடத்தி வந்திருக்கலாம் என சந்தேகம் கொண்டுள்ளனர். அதன்பேரில், கோவை வனத்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். ரயிலில் மண்ணுளி பாம்பு கடத்தி வரப்பட்ட இச்சம்பவம் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சேலம், கோவை வழியே கேரளாவிற்கு ரூ.1 கோடிக்கு விலை பேசி ரயிலில் கடத்திய மண்ணுளி பாம்பு சிக்கியது: மோசடி கும்பல் தப்பியோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: