2வது குழந்தையை விராட் கோஹ்லி-அனுஷ்கா தம்பதியினர் எதிர்நோக்கி உள்ள நிலையில் முதல் 2 டெஸ்ட்டில் இருந்தும் கோஹ்லி விலகினார். இந்நிலையில் அடுத்த 2 டெஸ்ட்டிலும் கோஹ்லி பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. கோஹ்லியின் தகவலுக்காக தேர்வு குழுவினர் காத்திருந்த நிலையில் அவர் மேலும் ஓய்வு கேட்டுள்ளார். கேப்டன் ரோகித்சர்மா மற்றும் அணி நிர்வாகம், தேர்வுக்குழுவினரிடம் பேசிய விராட் கோஹ்லி, நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதே தனது முதன்மையான விஷயமாக இருக்கும் அதே வேளையில், சில தனிப்பட்ட சூழ்நிலைகளால் விளையாட முடியாத நிலை இருப்பதாக விளக்கி உள்ளார். அவரின் இந்த முடிவை பிசிசிஐ மதிப்பதாகவும், அவருக்கு வாரியம் மற்றும் அணி நிர்வாகம் எப்போதும் ஆதரவாக இருக்கும் என்றும், மற்ற வீரரகளின் திறன்களை மேம்படுத்தி டெஸ்ட் தொடரில் பாராட்டத்தக்க செயல்பாடுகளை வழங்குவோம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 மற்றும் 4வது டெஸ்ட்டில் இருந்து விலகிய கோஹ்லி, தர்மசாலாவில் அடுத்த மாதம்7ம் தேதி தொடங்கும் கடைசி டெஸ்ட்டில் ஆடுவதும் சந்தேகம் தான் என கூறப்படுகிறது. இதனிடையே 2வது டெஸ்ட்டில் ஓய்வில் இருந்த சிராஜ், அடுத்த டெஸ்ட்டில் களம் இறங்க உள்ளார். தொடை பகுதியி்ல் காயம் அடைந்த ரவீந்திரஜடேஜா, மிடில் ஆர்டர் பேட்டர் கே.எல்.ராகுல் ஆகியோர் பெங்களூருவில் உள்ள என்சிஏவில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். காயத்தில் இருந்து குணமடைந்து வரும் இருவரும் உடற்தகுதியை எட்டுவார்கள் என்ற நம்பிக்கையில் பிசிசிஐ உள்ளது.
The post இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த 2 டெஸ்ட்டில் இருந்தும் கோஹ்லி விலகல்: கே.எல்.ராகுல், ஜடேஜா, சிராஜ் அணிக்கு திரும்புகின்றனர் appeared first on Dinakaran.