உதவி வேளாண் அலுவலர் பணிக்கான தேர்வை 276 பேர் எழுதுகின்றனர் வேலூர் மாவட்டத்தில் இன்று

வேலூர், பிப்.7: வேலூர் மாவட்டத்தில் உதவி வேளாண் அலுவலர் பணிக்கான தேர்வு இன்று நடக்கிறது. இத்தேர்வை 276 பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க சார்நிலை பணிகளில் அடங்கிய உதவி வேளாண்மை அலுவலர் பணிகளில் 84 காலி பணியிடங்கள், தமிழ்நாடு தோட்டக்கலை சார்நிலை பணிகளில் அடங்கிய உதவி தோட்டக்கலை அலுவலர் பணியில் 179 காலி பணியிடங்கள் என 263 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இப்பதவிக்கான தேர்வு கணினி வழியில் நடக்கும். இத்தேர்வு எழுத டிஎன்பிஎஸ்சியின் இணையதளத்தில் கடந்த டிசம்பர் 24ம் தேதி வரை விண்ணப்பித்தனர். இந்த தேர்வு பிப்ரவரி 7ம் தேதி (இன்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வும் (பட்டயப்படிப்பு தரம்), பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 2ம் தாள் தேர்வும் நடைபெறுகிறது. கணினி வழி தேர்வு சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெறுகிறது. வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே தனியார் கட்டிடத்தில் இன்று நடைபெறும் தேர்வை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உட்பட 276 பேர் எழுதகின்றனர். தேர்வு மையத்திற்குள் செல்போன், மின்னனு சாதனங்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post உதவி வேளாண் அலுவலர் பணிக்கான தேர்வை 276 பேர் எழுதுகின்றனர் வேலூர் மாவட்டத்தில் இன்று appeared first on Dinakaran.

Related Stories: