அண்ணாமலை தூண்டுதலின் பெயரில் ஆபாச வீடியோ அனுப்பி பாஜவினர் தொல்லை: சென்னை கமிஷனர் ஆபீசில் வீரலட்சுமி புகார்

சென்னை: அண்ணாமலை தூண்டுதலின்பேரில் பாஜவினர் ஆபாச வீடியோ அனுப்பி தொல்லை கொடுப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஆபீசில் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார். தமிழர் முன்னேற்ற படை கட்சி தலைவர் வீரலட்சுமி நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து, மாநில தலைவர் அண்ணாமலை தூண்டுதலின் பேரில் பாஜவினர் ஆபாச வீடியோக்களை அனுப்பி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்துள்ளார்.

பின்னர் வீரலட்சுமி அளித்த பேட்டி: பாஜ மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன், பல்வேறு ஊர்களில் பல்லாயிரம் கோடிகளுக்கு சொத்துக்களை வாங்கி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதாக பொதுமக்கள் என்னை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் கடந்த ஆறு மாதங்களாக ஆய்வு செய்து சுமார் 1500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதை கண்டறிந்தோம். இந்த சொத்துக்கள் குறித்து ஐந்து முறை வருமானவரித்துறை இயக்குநர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து வெவ்வேறு தேதிகளில் இவர்கள் பெயரில் உள்ள சொத்து பத்திரங்களை ஒப்படைத்தோம். இன்னும் 3 ஆயிரம் கோடி அளவிற்கு சொத்துக்கள் இருக்கிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாதாரண எல்ஐசி ஏஜென்ட் ஆக இருந்த பெண்மணிக்கு தற்போது எப்படி இவ்வளவு சொத்து வந்தது..?
பாஜ மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன் பாஜவில் கருப்பு பணத்தை வைத்திருப்பவர்களிடம் இருக்கும் பணத்தை வெள்ளையாக மாற்றி கொடுக்கும் வேலையை பார்த்து வருகிறார். இதைத்தொடர்ந்து நான் வெளிப்படுத்தி வந்ததன் அடிப்படையில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தூண்டுதலின் பெயரில் பாஜகவினர் என்னை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வருகிறார்கள். 15-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை தொடர்ந்து அனுப்பி மன உளைச்சலை உண்டாக்குவது மட்டுமில்லாமல் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து மிரட்டி வருகிறார்கள்.

நான் தொடர்ந்து புகார் கொடுத்தும் அண்ணாமலை ஏன் கண்டுகொள்ளவில்லை, பாஜவிற்கும் அந்தப் பெண்மணிக்கும் சம்பந்தமில்லை என்றால் ஏன் அவரை கட்சியிலிருந்து ஏன் நீக்கவில்லை..?
அண்ணாமலை தனது ஐபிஎஸ் மூளையை பயன்படுத்தி யார் யார் ரவுடிகளாக இருந்து பல்லாயிரம் கோடி சொத்துகளை சேர்க்கிறார்களோ அவர்கள் மீது அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி விட்டு அவர்களை கட்சியில் சேர்க்கிறார். இந்தியாவில் அமலாக்கத் துறையை பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தும் ஒரே இயக்கம் என்றால் அது பாஜதான். பாஜவினர் என்னை எந்த அளவிற்கு மிரட்டினாலும் நான் அஞ்ச மாட்டேன், தற்போது விஜய் கட்சி தொடங்கியுள்ளார். ஐந்து பேரால் ஒரு பெண் பாதிக்கப்பட்டபோது உதவி செய்யுமாறு அந்த பெண்மணி விஜய்க்கு கோரிக்கை வைத்தார். ஆனால் விஜய் அதை செய்யவில்லை. தற்போது அவர் கட்சி தொடங்கி இருக்கிறார் என்றால் தனது பணத்தை பாதுகாக்க மட்டுமே. இவ்வாறு அவர் கூறினார்.

The post அண்ணாமலை தூண்டுதலின் பெயரில் ஆபாச வீடியோ அனுப்பி பாஜவினர் தொல்லை: சென்னை கமிஷனர் ஆபீசில் வீரலட்சுமி புகார் appeared first on Dinakaran.

Related Stories: