நீர்பிடிப்பில் மழை பெய்வதால் பிளவக்கல் அணையின் நீர்மட்டம் உயர்வு

 

வத்திராயிருப்பு, ஜன.5: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்துள்ளது. வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாக கருதப்படக்கூடிய 47 முழு கொள்ளளவு கொண்ட பிளவக்கல் பெரியாறு அணை. அணை ஏற்கனவே மழையின் காரணமாக முழு கொள்ளளவை எட்டி பாசன வசதிக்காக நீர் திறக்கப்பட்டது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கூமாப்பட்டி, தம்பிபட்டி, கோட்டையூர், மகாராஜபுரம், பிளவக்கல் பெரியாறு அணை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பிளவக்கல் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 50 கன அடி நீர் வீதம் வந்து கொண்டிருப்பதால் 37 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 38 அடியாக உயர்ந்துள்ளது. பிளவக்கல் பெரியாறு அணை பகுதியில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

The post நீர்பிடிப்பில் மழை பெய்வதால் பிளவக்கல் அணையின் நீர்மட்டம் உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: