விஜயகாந்திடம் எந்த அளவுக்கு பணிவு உள்ளதோ, அந்த அளவுக்கு நியாயமான கோபமும் வரும் : நடிகர் கமல்ஹாசன் உருக்கம்

சென்னை : நல்ல நண்பருக்கு விடைகொடுத்துவிட்டு தாம் செல்வதாக மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று (டிச.28) காலை காலமானார். அவரது மறைவையடுத்து அவரது உடல் சென்னை தீவுத் திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் பல்வேறு பிரபலங்களும் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து விஜயகாந்த் அவர்களின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை தீவுத் திடலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், “எளிமை, நட்பு, உழைப்பு, பெருந்தன்மை போன்ற வார்த்தைகளை ஒரே மனிதருக்கு மட்டுமே சொல்ல முடியும் என்றால் அது விஜயகாந்த்தான். நட்சத்திர அந்தஸ்து வருவதுக்கு முன்னர் என்னிடம் எப்படி பழகினாரோ, அப்படி தான் இவ்வளவு உயரம் வந்த பிறகும் பழகினார்.

விஜயகாந்திடம் எந்த அளவுக்கு பணிவு உள்ளதோ, அந்த அளவுக்கு நியாயமான கோபமும் வரும். அதுவே அவரிடம் எனக்குப் பிடித்தது. அவரின் கோபத்தின் ரசிகன் நான். அதனால் தான் அவர் மக்கள் பணிக்கு வந்தார் என்றே நான் நினைக்கிறேன். இப்பபடிப்பட்ட நேர்மையாளரை இழந்திருப்பது என்னைப்போன்ற ஆட்களுக்கு ஒருவகை தனிமை தான். நல்ல நண்பருக்கு விடைகொடுத்துவிட்டு செல்கிறேன்” என்று உருக்கமாகப் பேசினார்.

The post விஜயகாந்திடம் எந்த அளவுக்கு பணிவு உள்ளதோ, அந்த அளவுக்கு நியாயமான கோபமும் வரும் : நடிகர் கமல்ஹாசன் உருக்கம் appeared first on Dinakaran.

Related Stories: