சென்னை: ஆம்பூர், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார். தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் உள்ள திமுக நிர்வாகிகளை சந்திக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘உடன் பிறப்பே வா’ என்ற தலைப்பில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து பேசினார்.
அப்போது தேர்தலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள், அறிவுரைகளை வழங்கினார். மேலும், கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். அதற்காக இரவு, பகல் பாராமல் உழைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் தகுதியுள்ள வாக்காளர்கள் யாராவது நீக்கப்பட்டிருந்தால் அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். தேர்தல் பணிகளை மேலும் முடுக்கி விட வேண்டும் என்று அப்போது வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
