தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் கண்ணீர்:
விஜயகாந்த் மறைவு செய்தியை அறிந்த ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி வருகின்றனர். விஜயகாந்த் வீட்டின் முன்பும், கட்சி அலுவலகம் முன்பும் ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர் அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,
தங்கமான உள்ளம் கொண்டவர்: நடிகை குஷ்பு
மாணிக்கத்தை, தங்கமான உள்ளம் கொண்ட மனிதரை இழந்து விட்டோம்; உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் என்று நடிகை குஷ்பு இரங்கல் தெரிவித்துள்ளார். விஜயகாந்தை இழந்து வாடும் குடும்பத்தினர், ரசிகர்கள், கட்சித் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று குஷ்பு கூறியுள்ளார்.
வானதி சீனிவாசன் இரங்கல்:
திரைத்துறையிலும், அரசியலிலும் கேப்டன் விஜயகாந்த் பெரும் சகாப்தம். திரைத்துறையில் விஜயகாந்த் பிடித்த இடம் என்பது யாராலும் நிரப்ப முடியாதது என்று வானதி சீனிவாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் ஆளுநர் இரங்கல்:
அன்பு நண்பர், மனிதநேயமிக்க மனிதர், சிறந்த கலைஞர் விஜயகாந்த் என்று ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளார். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி சேர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
சிறந்த மனிதனாய் வாழ்ந்து காண்பித்தீர்கள்: சேரன்
வாழும் காலம் முழுவதும் சிறந்த மனிதனாய் வாழ்ந்து காண்பித்தவர் நீங்கள் என்று இயக்குனர் சேரன் கூறியுள்ளார். வார்த்தைகளை தேடுகிறேன் கேப்டன்.. இறப்பு செய்தி குறித்த எந்த வார்த்தைகளுமே உங்களுக்காக எழுத மனம் ஒவ்வவில்லை. தீரா நோயில் இருந்து விடுதலை பெற்று போய் வாருங்கள்… வணங்குகிறேன் என விஜயகாந்த் மறைவுக்கு சேரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்படத் துறைக்கு பேரிழப்பு: பாரதிராஜா
விஜயகாந்த் மறைவு தமிழ் திரைப்படத் துறைக்கு பேரிழப்பு என்று இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த் மறைவு மிகுந்த துயரமும், வேதனையும் அளிக்கின்றது என இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.
The post மாணிக்கத்தை, தங்கமான உள்ளம் கொண்ட மனிதரை இழந்துவிட்டோம்: விஜயகாந்த் மறைவுக்கு நடிகை குஷ்பு, இயக்குனர் பாரதிராஜா இரங்கல் appeared first on Dinakaran.