கடலூரில் அக்னிவீர் படைப்பிரிவில் ஆட்சேர்ப்பு முகாம் ஜன.4 முதல் 13ம் தேதி வரை நடக்கிறது

ஊட்டி, டிச. 14: இந்திய ராணுவத்தில் அக்னிவீர் படைப்பிரிவில் ஆள் சேர்ப்பு முகாம் அடுத்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி துவங்கி 13ம் தேதி வரை கடலூரில் நடக்கிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் அருணா கூறியிருப்பதாவது: இந்திய ராணுவத்தில் அக்னிவீர் படைப்பிரிவில் பல்வேறு பணிகளுக்கான ஆள் சேர்ப்பு முகாம் சென்னை ராணுவ தலைமையகத்தால் அடுத்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி முதல் 13ம் தேதி வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அக்னிவீர் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பித்தவர்கள் முகாமில் தேவையான அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும். (சாதி சான்றிதழ், நன்னடத்தை சான்று, காவல் நன்னடத்தை சான்று, பான் கார்டு, ஆதார் கார்டு). முதல் கட்டமாக உடன் பரிசோதனை தேர்வு நடத்தப்படும். பின் கல்வி சான்றிதழ் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும். தேர்ச்சி பெற்றவர்கள் 2ம் கட்டமாக உடல் திறன் தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்கள் எழுத்து தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். மேலும் விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post கடலூரில் அக்னிவீர் படைப்பிரிவில் ஆட்சேர்ப்பு முகாம் ஜன.4 முதல் 13ம் தேதி வரை நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: