இயற்கை சீற்றத்தால் ஏற்படும் துன்பம் ஒரு பக்கமெனில், இலங்கை கடற்படையால் அவ்வப்போது ஏற்படும் செயற்கை நெருக்கடி மிகக் கொடிய துன்பமாகும். கடந்த 8-ம் தேதி, நடுக்கடலில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படை மிருகத்தனமாக தாக்கி அவர்கள் பிடித்த மீன் மற்றும் நண்டுகளையும் மீன்பிடி வலையையும் பறித்து சென்றனர். படுகாயமுற்ற மீனவர்கள் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மீண்டும் நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர், மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 25 மீனவர்களை கைது செய்தும், இரு படகுகளை பறிமுதல் செய்தும் உள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டும், கைது செய்து சிறையில் அடைப்பதுடன் அவர்களது மீன் வலைகள், படகுகள் என அனைத்தையும் பறிமுதல் செய்து செல்கின்றனர். தமிழக புதுச்சேரி மீனவர்களுக்கு தொடர்ந்து இலங்கை கடற்படையால் இழைக்கப்பட்டு வரும் அட்டூழியங்கள் தொடர்கதையாக உள்ளது. தமிழக, புதுச்சேரி மீனவர்களை ஒன்றிய அரசு இந்திய குடிமகன்களாக கருதவில்லையோ என்ற கேள்வி எழுகின்றது. பகை நாடு எனக் கருதப்படும் பாகிஸ்தான் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்லும் இந்திய மீனவர்களுக்கு இத்தகைய துன்பங்கள் ஏற்படுவது இல்லை. ஆனால் நட்பு நாடு எனக் கூறப்படும் இலங்கை கடற்படையால் தமிழக, புதுவை மீனவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அட்டூழியங்களுக்கு ஒன்றிய அரசு முற்றுப்புள்ளி வைக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
The post இலங்கை கடற்படையின் அட்டுழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்க : முத்தரசன் appeared first on Dinakaran.
