திருவாடானை,டிச.10: திருவாடானை வளர்ந்து வரும் பகுதியாகும், இங்கிருந்து திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை 4 கிலோ மீட்டர் தொலைவிலும் ஈசிஆர் சாலை 10 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. மேலும் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் செல்லும் வாகனங்களும் பாகம்பிரியாள் கோயில் செல்லும் வாகனங்களும் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் திருவாடானை அதிக போக்குவரத்து நிறைந்த பகுதியாக உள்ளது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் ஏராளமான சுற்று கிராமங்கள் உள்ளன.
இந்த கிராம பகுதிகளில் இருந்து அதிகமான பாரங்களை ஏற்றுக் கொண்டு லாரிகள், மினி வேன்கள் போன்றவைகள் செல்கின்றன. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன் பல சமயங்களில் விபத்து ஏற்படுகிறது. அவ்வப்போது போலீசார் இது மாதிரி அதிக லோடுகள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். இருப்பினும் போக்குவரத்திற்கு இடையூறாக விதிமீறி செயல்படும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. எனவே இதுபோன்ற வாகனங்கள் மீது அதிக அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post போக்குவரத்துக்கு இடையூறாக அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனம் appeared first on Dinakaran.
